Tuesday 30 September 2014

பிரதி எடுக்காதீர்கள்

வால்மிகி எழுதிய இராமாயணம் போலவே தன்னைப் பற்றியும் ஒரு காவியம் எழுத வேண்டும் என தன் அவைப்புலவர்களை அழைத்து கூறினான் முகம்மது பின் துக்ளக்.

புலவர்களோ எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.

என்ன விழிக்கிறீர்கள்? இராமனை விட நான் எந்த விதத்தில் குறைந்தவன்? உங்களால் எழுத முடியுமா? முடியாதா? என்று தன் அவைப்புலவர்களிடம் கர்ஜித்தான் துக்ளக்.

ஏன் முடியாது? உங்களுக்கு என்ன குறை? ஆனால் ஒரு சந்தேகமிருக்கிறது. அதைத் தாங்கள் தீர்த்து கொடுத்தால் இன்றே அதற்கான வேலைகளை ஆரம்பித்து விடலாம் என்றார் ஒரு புலவர்.

என்ன சந்தேகம்? என்றான் துக்ளக்.

இராமாயணத்தில் இராமனின் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு போய்விடுகிறான் என்று சொல்லி விட்டு துக்ளக்கை பார்த்தார் புலவர்.

புலவர் சொல்ல வந்ததை உணராத துக்ளக், “ஆமாம். அதற்கென்ன?” என்று கேட்டான்.

அதைப்போல தங்களின் காவியத்தில் தங்களுடைய மனைவியை தூக்கிக் கொண்டு செல்பவர்…..என்று புலவர் சொல்லி முடிப்பதற்குள் துக்ளக் சொன்னான். நீங்கள் காவியமே எழுத வேண்டாம். இங்கிருந்து போய்விடுங்கள் என்று!

துக்ளக்கை போல தான் நம்மில் பலரும் இருக்க முயல்கிறோம். ஆசைப்படுகிறோம். ”எனக்கு இவர் தான் ரோல் மாடல். அவரை மாதிரியே நானும் ஆகப் போகிறேன்என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், எத்தனை பேர் இப்படி நினைக்கிறோம்? இப்படி நினைப்பதற்கு பதிலாக அவராகவே மாற முயல்கின்றோம். அப்படி முயலும் போது தான் முட்டுக்கட்டைகளும் முளைத்து எழுகின்றன. காந்தியடிகளின் போராட்ட முறையை கையிலெடுத்த மார்ட்டின் லூதர்கிங் காந்தியடிகள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. தான் போராட்டத்தில் நிற்கின்ற களத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப, மக்களுக்கு ஏற்ப வழிமுறைகளை மாற்றிக் கொண்டு செயல்பட்டார். அத்தகைய செயல்பாடு தான் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

போலச் செய்தல்என்ற விசயம் ஒருநாளும் வெற்றியைத் தராது. ஆனால் துரதிருஷ்டவசமாக நம்முடைய வாழ்வியல் முறைகளில் பள்ளி தொடங்கி, வேலையிடம் வரை ஒவ்வொருவருமே போலச் செய்தல் வழிமுறைகளுக்கு தான் பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம். அவ்வாறே நம்மை சார்ந்து வளரும் குழந்தைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். சக குழந்தைகள், சக ஊழியர்களை ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுக் கொள்வதில் தான் போலச்செய்தல் என்பது ஆரம்பமாகிறது. இந்த ஆரம்பம் ஒருநாளும் வாழ்க்கையை மேம்படுத்தி தராது. தன்னை வெற்றியாளராக அடையாளப்படுத்தாது என எவருமே உணர்வதில்லை. உங்களின் வெற்றிக்கான வாசல் விசாலமடைய வேண்டுமானால் போலச்செய்தல் என்னும் மனநிலையை முதலில் மூட்டை கட்டுங்கள்நீங்கள் மற்றொருவராக மாற எதுவும் செய்யவில்லை. உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளவும், உங்களுடைய இலக்கை வெற்றி இலக்காக மாற்றவும் செய்கின்ற விசயங்கள் பிரதி எடுத்தலாக இல்லாமல் இருப்பது அவசியம். அத்தியாவசியம்போலச்செய்தலுக்கு பதிலாக செய்ய வேண்டிய விசயங்களை மாற்றுச் சிந்தனைகளோடு அணுகுங்கள். ”மாத்தி யோசிஎன்பது வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் பிரம்ம சூத்திரம். அந்த சூத்திரத்தின் வழி உங்களுக்கான இறுப்பை எப்பவுமே உறுதி செய்ய முயலுங்கள்.

ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாருக்குத் தருவது என முடிவு செய்வதற்காக அவர்களுக்குள் ஒரு போட்டியை வைத்தார். யார் அதிக அளவு தலை வாரும் சீப்புகளை புத்தமடாலயத்திற்கு விற்கிறார்களோ அவர்களிடம் வியாபாரத்தை ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்? என்பதைப்போல மொட்டைத் தலையுடன் புத்தமடாலயத்தில் இருக்கும் பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா? என மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஆனால், அது மட்டுமே தன் தந்தையிடம் இருக்கும் வியாபாரத்தை தனக்கு மாற்றித் தரவைக்கும் என்பதால் மூவரும் வியாபாரத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.

சில நாட்கள் சென்றதும் வியாபாரி மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவரும் எவ்வளவு சீப்பு விற்று இருக்கிறீர்கள்? என்று கேட்டார். முதல் மகன், நான் இரண்டு சீப்புகளை விற்றேன் என்றான். எப்படி? என்றார் வியாபாரி. அதற்கு அவன்இந்த சீப்புகளைக் கொண்டு முதுகு கூட சொறியலாம் என்றேன். அதைக்கேட்ட அங்கிருந்த புத்த பிக்குகளில் இருவருக்கு அது சரி என பட்டதால் இருவர் மட்டும் சீப்பை வாங்கிக் கொண்டனர்என்றான். இரண்டாவது மகன் நான் பத்து சீப்புகளை விற்றேன் என்றான். சந்தோசப்பட்ட வியாபாரி எப்படி? என்றதும்மலைமேல் உள்ள இந்த புத்தமடாலயத்திற்கு வரும் வழியெல்லாம் காற்று பயங்கரமாக வீசுவதால் இங்கு வருகின்றவர்களின் தலைமுடியெல்லாம் காற்றில் கலைந்து அவர்கள் பார்க்கவே பயங்கரமானவர்களைப் போல் தோற்றமளிக்கிறார்கள். அமைதியையும், அன்பையும் போதித்த புத்தரை இங்கு தரிசிக்க வருபவர்கள் அப்படி வருவது புத்தரை அவமதிப்பது போல் உள்ளது. அதனால் கூடத்தில் ஒரு நிலைக்கண்ணாடியையும், சீப்புகளையும் வைத்தால் அப்படி வருபவர்கள் தங்களுடைய தலைமுடியைச் சரிசெய்து கொண்டபின் புத்தரை தரிசிக்க முடியும் என்றேன். நான் சொன்னதை ஏற்றுக் கொண்ட புத்த பிக்குகள் அங்கு வைப்பதற்காக என்னிடமிருந்து பத்து சீப்புகளை பெற்றுக் கொண்டனர்என்றான்.

மூன்றாவது மகனோ, “ஆயிரம் சீப்புகளை விற்பனை செய்தேன்என்றான். அதைக் கேட்ட வியாபாரி அசந்து போனான். எப்படி உன்னால் முடிந்தது? என ஆச்சரியமாக கேட்டான். ”அந்த புத்தமடாலயத்திற்கு வருபவர்களில் பலர் அம்மடாலயத்திற்கு பொருளுதவி செய்கிறார்கள். அவர்களின் உதவியைப் போற்றி புத்தரின் ஆசி அவர்களை வழிநடத்திச் செல்லும் என சொல்லும் வகையில் அவர்களுக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கலாம் என்றும், அப்படி செய்வதால் மடாலயத்திற்கு இன்னும் அதிக உதவிகள் கிடைக்ககூடும் என்றும் சொன்னேன். அதற்கு அந்த மடாலயத்தலைவர் நல்ல யோசனை தான். ஆனால், அதிக விலையுள்ள நினைவுப்பரிசுகள் வாங்கி அவ்வளவு பேருக்கும் தருவது சாத்தியமில்லை. அதனால் வேறு நினைவுப்பரிசு ஏதுமிருந்தால் சொல்லுங்கள் என்றார். நான் புத்தரின் வாசகங்களைப் பொறித்து என்னிடம் வைத்திருந்த சில சீப்புகளை எடுத்து நீட்டினேன். இந்த சீப்புகளை உபயோகிக்கும் பக்தர்களுக்கு அதிலிருக்கும் வாசகம் தினமும் கண்ணில் படும். அதைப் பார்க்கும் நேரமெல்லாம் அதிலுள்ள புத்தரின் வாசகங்கள் அவர்களை வழிநடத்துபவைகளாகவும் இருக்கும் என்றேன். என்னுடைய அந்த யோசனை அவருக்கு பிடித்துப் போகவே புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகளை வாங்க ஒப்புக் கொண்டதோடு தொடர்ந்து வாங்கவும் உறுதியளித்துள்ளார்என்றான். அசந்து போன அந்த வியாபாரி யாரிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்திருப்பான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த நிகழ்விலிருக்கும் சூட்சும விதிக்கு வருவோம்.

மூன்று பேருமே ஒரே வியாபாரத்திற்கு தான் சென்றார்கள். ஆனால், முதல்மகன் எல்லோரையும் போல் சீப்பை தலைவாருவதற்கு உதவும் ஒரு பொருளாக மட்டுமே பார்த்தான். இரண்டாவது மகன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பயன் படாது என்றபோதும் அதற்கு சம்பந்தமுள்ளவர்களை மையப்படுத்தி அந்த இடத்தில் தன் வியாபாரத்தை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டான். வெற்றிவாகை சூடிய மூன்றாம் மகன் யாரும் அணுகாத கோணத்தில் சீப்பை விற்பதற்குரிய வழிகளைத் தேடினான். மாற்றுச் சிந்தனையின் வழி தன்னை அவன் நிலைநிறுத்திக் கொள்ள செய்த முயற்சி அவனுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அதோடு இல்லாமல் தொடர் பலனையும் கொடுக்க வழி செய்தது. சிறு, சிறு மாற்றங்கள் பெரிய விளைவுகளைத் தருவதைப் போல சிறு, சிறு மாற்றுச் சிந்தனைகளின் வழி நீங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், தொடர் இயக்கத்திற்கும் உருவாக்கிக்கொள்ளும் வழிகள் உங்களின் வாழ்வையே மொத்தமாக மாற்றியமைத்து விடும். வியாபாரியின் மூன்றாவது மகனைப் போல் சிந்தித்து தன் நிறுவனத்தை வெற்றி பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்டியவர் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால் நிறுவனங்களின் அதிபர் சந்திர மோகன்!

வால்ஸ், குவாலிட்டி போன்ற ஐஸ்கிரீம் ஜாம்பாவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலூன்றி விட்டு சென்னைக்கு வந்தது அவருடைய அருண் ஐஸ்கிரீம். கடும் போட்டி நிலவி வந்த சூழலில் தன்னுடைய ஐஸ்கிரீமை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த நினைத்த சந்திர மோகன் எல்லோரையும் போல கூவி, கூவி விற்கவில்லை. வாசலில் நின்று வருவோர் போவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லவில்லை. அப்படி செய்வது பெரும் அபத்தம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் மாறுபட்டு ஏதாவது செய்தால் மட்டுமே மக்களை தங்கள் பக்கம்  இழுக்க முடியும் என நினைத்தார். எட்டு ரூபாய் நுழைவுக் கட்டணம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பரிசு என்று அறிவிப்பு செய்தார். அந்த ஒரு மாறுபட்ட அறிவிப்பு - வித்தியாச சிந்தனை நான்காயிரம் பேரை திரும்பி பார்க்க வைத்தது. அருண் ஐஸ்கிரீம் சென்னைக்குள் நுழைந்து மற்ற நிறுவனங்களோடு போட்டி போடுவதற்கான  வாசலை திறந்துவிட்டது. இதே போன்ற மாற்று சிந்தனையில் ஜெயித்த இன்னொருவர் கிருஷ்ணன். இவர் கோகுலத்து கிருஷ்ணரல்ல. கோயம்பத்தூர் கிருஷ்ணர்!

ஆன்மிகம் தவிர்த்து கிருஷ்ணா என்ற பெயரை உலகம் முழுக்க தனது ஸ்வீட்ஸ் மூலம் கொண்டு சென்றவர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன். அந்தக்கால கட்டத்தில் எல்லா பலகாரக் கடைகளும் இங்குள்ள இனிப்புகள் நெய்யினால் செய்யப்பட்டவைகள் அல்ல என போர்டு மாட்டி வைத்திருக்க இவரோ எங்களுடைய ஸ்வீட் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டது என போர்டு மாட்டி வைத்ததோடு அறிவிப்பும் செய்தார். அந்த அறிவிப்பு இவருடைய கடையை நோக்கி பலரை இழுத்து வந்தது. வந்தவர்களை தன்னுடைய இனிப்பின் மூலம் தக்க வைத்துக் கொண்டார். இன்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்பது இனிப்பு பலகாரங்களின் அடையாளங்களுள் ஒன்றாகி விட்டது.

எல்லோரையும் போல்என்ற சொல் உங்களுடைய வெற்றியை, அடையாளத்தை மிக தொலைவில் கொண்டு போய் வைத்து விடும். நாரினாலான மட்டைக்குள் எப்படி சுவையான நீரைக் கொண்ட தேங்காய் இருக்கிறதோ அப்படி தான் பிரச்சனைகளுக்குள் தீர்வுகள் ஒளிந்து கிடக்கின்றன.  நீங்கள் அணுகும் விதத்தில் தான் அது வெளியே தலைகாட்ட ஆரம்பிக்கும். நம் அடிமனதில் பழக்கத்தால் பதிந்து போய் இருக்கின்ற எண்ணங்கள் இப்படி செய்தால் போதும் என்று அனிச்சையாக சில முடிவுகளை எடுக்க வைத்து விடுகின்றன. காய்ச்சலா? பாராசெட்டமால் போடு என மருத்துவம் படிக்காமலே நம்மில் பலரும் காய்ச்சலுக்கு தீர்வு சொல்வது இந்த அனிச்சைச் செயலின் வெளிப்பாடு தான். சிலருக்கு இந்த அனிச்சைச் செயலின் அளவு முற்றிப் போகும் போது அவர்களே மருத்துவர்களாக மாறி பலரின் வாழ்க்கையோடு விளையாடி விடுகிறார்கள். காவல்துறையிடம் மாட்டி கம்பி எண்ண போய்விடுகிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் உங்கள் உள் உணர்விலிருந்து கிடைக்கும் பதிலை முடிவானதாக கொள்ளாதீர்கள். அதற்கு வேறு தீர்வு இருக்கிறதா? என பாருங்கள். அந்தப் பார்வை, மாற்று சிந்தனை தரும் தீர்வுகள் மட்டுமே மற்றவர்களின் பார்வையை உங்களை நோக்கி திருப்பும். உங்களை பத்தோடு ஒன்றாக ஆக்காமல் பத்தில் ஒன்றாய் ஆக்கும்.

நன்றிநிலாச்சாரல்