Saturday 21 November 2015

உந்துதல் தந்த உபதேசங்கள் - 3

கணவன் மனைவிக்கிடையேயான வாய்சண்டைகளில் ஒருவர் மட்டுமே இயங்க வேண்டும். கட்டில் சண்டைகளில் இருவரும் இயங்க வேண்டும்இந்த இங்கீதம் தெரிந்தால் வாழ்க்கை சங்கீதமாகும்.

தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவாத தேடல்களால் ஒரு பயனுமில்லை, ”தேடல்கள் வழி தேவைகள் கிடைக்கலாம்என்பது ஆறுதலுக்கான வார்த்தைகள்!

உன் கையில் வைத்திருப்பது அஸ்திரம் என்றும், அது செலுத்தப்படுவதற்கானவை என்றும் முதலில் நம்பு. எதை நோக்கிச் செலுத்துவது? என்பதை அதன் பின் முடிவு செய்து கொள்ளலாம்.

உன் வாழ்வில் எதையும் நிலை நிறுத்த வேண்டியதில்லை. நியதிகளாய் நிலை நிறுத்தப் பட்டிருப்பவைகளின் வழி இந்த வாழ்வை வாழ்ந்து முடி. அதுவே போதுமானது. உத்தமமானது.

உன் கோப்பைகளைக் காலியாக வைத்திருப்பதில் இருக்கும் அக்கறை அதை மற்றவர்கள் தங்களின் தேவைகளுக்காக நிரப்பி விடாமல் காப்பாற்றிக் கொள்வதிலும் இருக்க வேண்டும்.

சொற்ப விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடைசிப் பக்கம் இல்லாத நாவலை வாங்காதே! அந்தச் செயல் விற்றவனுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். வாங்கியவனுக்கு வாதனையை மட்டுமே தரும்.

காலைக் கடித்த செருப்பைக் கழற்றி எறி, கையில் தூக்கி முத்தமிடாதே!

தூண்டில் போடுபவன் ஒரு போதும் தக்கைகளை எதிர்பார்ப்பதில்லைஆனால் அவைகள் தூண்டிலில் அகப்படுமேயானால் அதற்காக தூண்டிலை மறுமுறை போடாமலும் இருப்பதில்லை. மீன்கள் இலக்கு, மற்றவை எல்லாம் மிச்சம்! அப்படி மிச்சமாகக் கிடைத்தவைகளை அனுபவமாக மாற்றிக் கொள்.

அறிவுரைகளை விட அதன் மூலம் கிடைக்கும் விளைவுகளே அதை வழங்கியவரைச் சிறப்புக்குரியவராக்குகிறது.

எதிர்கால இலக்கு நோக்கி நிகழ்காலத்தில் எய்யப்படும் அஸ்திரங்கள் மிகச் சரியாகச் சென்றடையும் என நினைப்பது முட்டாள்தனம். மாற்று வழிகள் கொண்டிராத அஸ்திரங்கள் வெறும் காகித அம்புகளாக மட்டுமே இருக்கும்