Saturday 24 December 2016

தேர்வறை பட்டாசுகள்!

நவம்பர், டிசம்பர் பல்கலைக் கழகத் தேர்வு மாதங்கள். அம்மாதங்களில் நாமளும் ஒரு டிகிரி காப்பி மாதிரி டிகிரி வாங்கிடனும்னு என்ற நினைப்போடு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பஞ்சமிருக்காது. அதற்காகத் தேர்வறையில் அவர்கள் செய்யும் திகிடுதத்தங்கள்,  அதன் பொருட்டு எடுக்கும் முயற்சிகள்,  அதில் சிக்கல்கள் வரும் போது அதை எதிர் கொள்ளும் வினோதங்களுக்கு  குறைவிருக்காது.  அப்படிச் சென்ற முறை நான் தேர்வெழுதச் சென்ற போது நிகழ்ந்தவைகளில் சில சுவராசியமான  விசயங்கள்

புக்லெட்டுல பக்கம் போட மறந்துடாதீங்க.

உங்க கையெழுத்தைப் போட மறந்துடாதீங்க

சூப்பர்வைசர் கையெழுத்து இருக்கான்னு செக் பண்ணிக்கங்க.

அட்டன்டென்ஸ் கையெழுத்து ரெம்ப முக்கியம். இப்படி தேர்வறையில் ஒவ்வொரு நாளும் காதில் விழும் வழக்கமான கவன ஈர்ப்பை மேற்பார்வையாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அறைக்குள் நுழைந்த புதிய மேற்பார்வையாளர் ஒருவர் இன்னொரு முக்கியமான விசயம் என்றார்

அனைவரும் அவரை ஏறிட்டுப் பார்க்க "பேப்பரைத் தரும் போது நல்லா உதறி கொடுத்துட்டு போங்க. "பிட்" (துண்டுச் சீட்டு)  வச்சு எழுதிட்டு அதை உள்ளேயே வச்சுக் கொடுத்துட்டுப் போறது நல்லாவா இருக்கு" என்றார்.

  •  

தேர்வறையிலிருந்து இடையில் எழுந்து வர விரும்பாததால் அறைக்குள் நுழையும் முன் இயற்கை உபாதைகளை நீக்க கழிவறை செல்வது வழக்கம். அப்படி சென்ற போது கழிவறைக் கதவின் பின்னிடுக்கில் ஒரு பையன் புத்தகததை செருகிக் கொண்டிருந்தான். இவவளவு பெரிய வராந்தாவில் தன் புத்தகத்தை வைக்க இடம் இல்லைன்னு இங்கே செருகி வைக்கிறானோ? என்று நினைத்த படி கண்டும், காணாமல் என் வேலையை முடித்து விட்டுத் திரும்பினேன்

தேர்வு தொடங்கி அரைமணி நேரம் ஆன போது அநதப் பையன் கழிவறை செல்ல அனுமதி கேட்டுச் சென்றான். ஒரு ஆவலில் நானும் அனுமதி கேட்டு கழிவறைக்குச் சென்றேன்.

வினாத்தாளை கையில் வைத்தபடி புத்தகப் பக்கங்களை கிழித்துக் கொண்டிருந்தான். நான் தேர்வறைக்கு திரும்ப அவனும் வந்தான். அடுத்த இரண்டுமணி நேரத்தை தன் தேர்ச்சிக்கு முழுமையாகச் செலவிட்டான்.

முன் தயாரிப்போடு வருவதை விடவும் உடனடி தயாரிப்பாய் இப்படி "பிட்" தயார் செய்வதற்கும் "தில்" வேணும்

  •  

தேர்வெழுத வந்திருந்த என்னில் மூத்தவராய் இருந்தவர் அறையில் இருந்த படியே தங்கள் அங்கங்களுக்குள் "பிட்" டை நுழைத்துக் கொண்டிருந்தவர்களை என்னோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்

நான் அவர் முகத்தைப் பார்த்தும் "பல் இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்" என்றார். பதிலுக்கு நான் எதுவும் சொல்லாமல் லேசாக சிரித்து வைத்தேன். தேர்வு ஆரம்பித்த அடுத்த அரைமணி நேரத்தில் தன் இடுப்பில் இருந்து உருகி கத்தை கத்தையாய் காகிதங்களை தன் மேஜைக்கு அடியில் நுழைந்தார்.

"டேய்.........அவனா நீ" என அவரிடம் சொல்லத் தோன்றினாலும் சொல்ல முடியாத சூழல்எழுதுவதை நிறுத்தி விட்டு அவரையே பார்த்தேன்

முன்பு நான் சிரித்து வைத்ததுக்குப் பதில் சிரிப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு காரியத்தில் கண்ணாய் இருந்தார்ஆளை வைத்தெல்லாம் எடை போடக் கூடாதுங்கிறது இதுதான் போல!

  •  

தேர்வறைக்குள் நுழைவதற்கு முன் "கோயில் அமைப்பும் திரு உருவங்களும்" என்ற பாடநூலை என்னோடு தேர்வு எழுதிய ஒருவர் கையில் வைத்திருப்பதை பார்த்தேன். இது கடந்த பருவத்தேர்வுக்குரிய பாடமாச்சே. அரியர் பேப்பரா இருந்தாலும் அதை எழூதுவதற்கான தேதி போன வாரமே முடிஞ்சிடுச்சே என பல கேள்விகள் மனதில் வந்து உருட்ட அவரிடம் இன்னைக்கான எக்ஸாம் "கோயில் நடைமுறைகள்" பாடம் தானே. நீங்க போன வருசப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கீங்களே என்றேன்

கொஞ்சம அதிர்ச்சியாய் தன் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்து விட்டு "இன்னைக்கு இது இல்லையா" என்றவர், "ஆமாம்....... இன்னைக்கு 26 (subject code no). கவனிககாம 36 எடுத்துட்டு வந்துட்டேனே" என்றார்.

காமராசா? ராமராசா?ன்னு கேட்கிற வடிவேலு வாய்ஸ் என் கண் முன்னே வந்து போக கடைசி பரிட்சையும் அதுவுமா பைத்தியம் பிடிக்க வச்சுராதீங்கடான்னு நினைத்துக் கொண்டு தேர்வறைக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்.

  •  

தேர்வறையில் வினாத்தாளின் மேல் வினாத்தாளாகவே "பிட்" தாளை வைத்து ஒரு பெண்மணி எழுதிக் கொண்டிருந்தார். இன்னொரு பெண்மணி அலைபேசியில் மொத்த புத்தகத்தையும் பதிவேற்றி வந்து ஒரு கண் பார்க்க, ஒரு கை தள்ள, ஒரு கை எழுத என பம்பரமாய்(!) செயல் பட்டுக் கொண்டிருந்தார்

இருவரும் தமிழில் எழுதியதால் என்ன பாடப் பிரிவாய் இருக்குமென பாரத்தேன். பி.எட்.(B.Ed) என்றதும் சற்றே அதிர்ந்து போய் அவர்களை ஏறிட்டுப் பார்த்தேன். இருவரும் தொலைநிலைக்கல்வி முறையில் படிக்கிறவர்கள். அவர்கள் மாணவப் பருவத்திற்கு உரியவரகள் இல்லை என்பதை அவர்களின் வயதும், தோற்றமும் காட்டியது

பி.எட் என்பதால் அவர்கள் மாணவர்கள் சார்ந்த நிறுவனம்/ பள்ளிகளில் பணி புரிபவர்களாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. சம்பள உயர்வுக்கும், பதவி உயர்வுக்கும் எழுதுபவர்களாய் இருந்தாலும் கூட இவ்வளவு அநாயாசமாய் செயல்படுபவர்களிடம் பாடம் படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் எப்படி உருவாகுவார்கள் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இவர்களை நம்பி தலைவர்களை உருவாக்கச் சொன்னால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்?

நண்பனிடம் ஆதங்கத்தோடு இதைச் சொன்னேன். பிடறிதெறிக்கும் விதமாய் " வாத்தியாரா இருக்குறதுக்கும் பிட் அடிக்கிறதுக்கும் என்ன மாப்ள சம்பந்தம்?" என்றான்.

"அடடா..எனக்கு இது தெரியாம ஆறு பரிட்சையை படிச்சு எழுதிட்டனேப்பா" என வடிவேலுவைப் போல நானும் சொல்லிக் கொண்டேன். வேறு என்ன சொல்லியும் மனசை தேத்திக்க முடியல!

  •  

தேர்வு அறைக்கு முன் இருந்த படிக்கட்டை நெருங்கியதுமே பக்கத்தில் நின்று கொண்டிருந்த நேற்றைய தேர்வறை நண்பர், "பாசூ....இன்னைக்குன்னு மெயின் ஹாலைப் போட்டுட்டானுக" என்று பதறினார்.

எங்கே போட்டா என்ன? பரிட்சை தானே எழுதப் போறோம்.

இவனுக நேத்து மாதிரி சின்ன ஹால்ல போடுவானுக. ஈசியா தட்டிடலாம்னு மைக்ரோ போட்டோ காப்பி எல்லாம் எடுத்துப் பக்காவா கொண்டு வந்தேன் பாசூ. இப்படிப் பண்ணிட்டானுகளே.

மெயின்ஹால்னா பிட் எழுத முடியாதா? என்றேன்.

"எலலா வாத்தியாரும் ஒரே இடத்துல சுத்திக்கிட்டு வருவானுக. தேடி எடுத்து எழுதுறது கஷ்டம் பாசூ" என கலங்கிப் போனார்.

மணியடித்ததும், ”இனி கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது? வாங்க சீட்டுக்குப் போவோம்” எனச் சொல்லி விட்டு எனக்கான இருக்கைக்குச் சென்று விட்டேன்.

தேர்வு முடிந்து வெளியில் வநததும் எப்படி எழுதுனீங்க? எனறேன்

கொண்டு போனது வேலைக்கு ஆகல பாசூ. புத்தகத்தை வீட்டுல போட்டுட்டு வந்தது வசதியாப் போச்சு. வாட்ஸ் அப்ல கொஸ்டின் பேப்பரை அனுப்புச்சேன். பதிலைத் தேடி அனுப்பி வச்சுட்டானுக. பக்காவா எழுதியாச்சு. "பாஸ்" கன்ஃபார்ம் பாசூ என்றார்.