Monday 20 November 2017

நன்மைகள் நல்கிடும்(ராம) நவக்கிரகங்கள்!

அசுரர்களின் அரசனான ரம்பா என்ற அசுரன் ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமைமாடு குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய இராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அந்த பெண் எருமையின் மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். உருவில் எருமை மாடுகளாக இருந்த அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியே வர ஆரம்பித்தது.

அசுரர்களுக்கு தேவர்களைக் கண்டாலே ஆகாது. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தேவர்களை வச்சு செஞ்சு விடுவதில் அசுரர்களுக்கு அலாதி பிரியம். அந்த குலத்தில் இருந்து வந்தவன் என்பதால் வானுலக தேவர்களை வதைக்க ஆரம்பித்தான். இந்திரலோகத் தலைவன் இந்திரன் மீது படையெடுத்து அவனை ஓடி ஒளியச் செய்தான். இந்திரனையே விரட்டியடித்தவனுக்கு தேவர்கள் எல்லாம் எம்மாத்திரம்? தினமும் அவனுக்கு அஞ்சி, அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தனர்

ஆண்களின் கண்களுக்குப் புலப்படாமல் தங்களைத் தொல்லை தந்து கொண்டிருக்கும் மகிஷாசுரனின் கொட்டத்தை அடக்கி அழிக்கக்கூடிய சக்தி பராசக்தியான அகிலாண்டேஸ்வரி தேவிக்கு மட்டுமே உள்ளது என்பதை தேவர்கள் அறிந்தனர். உடனடியாக தேவியின் பாதத்தில் சரணடைந்தனர். சரணாகதிக்கு மிஞ்சியது ஏதுதன்னைச் சரணடைந்தவர்களின் துயரங்களைப் போக்க  தேவி முடிவு செய்தாள்

மகிஷாசுரனை நேருக்கு நேர் களத்தில் சந்தித்தாள். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் தேவியை எதிர்த்து நிற்க முடியாமல் மகிஷாசுரன் பின்வாங்க ஆரம்பித்தான். பின்வாங்கி சென்றவன் திருமால் தன் பக்தனான காலவரிஷி முனிவரை கொடிய அரக்கனிடமிருந்து காக்க தன் சக்ராயுதத்தை ஏவி அவருக்கு காவலாக அதை நிறுத்திய இடமான சக்கரதீர்த்தத்திற்குள் சென்று பதுங்கிக் கொண்டான்

கரையில் இருக்கும் தேவியால் தன்னை எதுவும் செய்ய முடியாது என நினைத்த மகிஷாசுரனின் நினைப்பு பொய்யாகிப் போனது. தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற முதுமொழி மகிஷாசுரனின் விசயத்தில் பொய்யாகிப் போனது. தேவியோ, சக்கரதீர்த்தத்தை வற்றச் செய்து அதனுள் பதுங்கி இருந்த மகிஷாசுரனை வெளியோ கொண்டு வந்து கொன்று தேவர்களின் துயரை துடைத்தாள். அதன்பின் சக்கரதீர்த்தத்தை மீண்டும் அங்கு தோன்றச் செய்தாள். சக்கரதீர்த்தம் ஆரம்பத்தில் தேவிபட்டிணத்திலிருந்து திருப்புல்லணை (திருப்புல்லாணி) வரை நீண்டிருந்தது. பிறகு இடையில் மண் மேவி நிலமானதால் திருப்புல்லணையில் இதன் ஒருபகுதியாக எஞ்சி இருக்கும் தீர்த்த பகுதியும் சக்கரதீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

மகிஷாசுரனை வதம் செய்த தேவி குடிகொண்ட ஊர் (பட்டணம்) என்பதால்தேவிபட்டணம்என அழைக்கப்பட்டதுஆரம்பத்தில்தேவிபுரம்என்றழைக்கப்பட்ட இவ்வூர் புராணங்களில்தேவிப்பூர்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக பூஜை செய்ய வேண்டும் என்பது வேதசாஸ்திரங்கள் வகுத்தளித்த விதி முறையாகும். விதிமுறைகளை தன் விருப்பத்திற்கேற்ப வளைப்பதும், மீறுவதும் மனித குணம். இராமரோ அமனித உருவில் இருக்கும் அவதார புருஷரல்லவா? மூத்தோர் வகுத்தளித்த வழிமுறைகளை பின்பற்ற நினைத்தார். அதன்படி உப்பூரில் விநாயகர் வழிபாட்டை முடித்தவர் நவக்கிரக வழிபாட்டை இங்கு செய்ய முடிவு செய்தார்

மனிதர்கள் வாழும் கோளான (கிரகம்) பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிற கோள்கள் உள்ளன. அக்கிரகங்களின் மாற்றங்கள் மனிதனுடைய செயல்பாடுகளிலும், வாழ்வியலிலும் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. நேரடியான பலன்களை தரக்கூடியவை. “கெரகம் சரியில்லை என்றால் கிரகம் சுற்றி வாஎன்பது சொலவடை. கிரகம் என்பது நவக்கிரகத்தைக் குறிக்கும். நவம் என்றால் ஒன்பது. இந்த ஒன்பது கிரகங்களையும் வானியலார் வரிசையாக முறையே சூரியன், சந்திரன், செவாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என அமைத்துள்ளனர். இந்த ஒன்பது கிரகங்களின் ஆசி கிடைக்கப் பெற்ற ஒருவன் எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறுவான். அந்த வெற்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதாலயே முன்னோர்கள் எல்லா ஆலயங்களிலும் விநாயகர் வழிபாட்டோடு நவக்கிரக வழிபாட்டையும் வைத்தனர்

சீதையை மீட்பதற்கான முயற்சியில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நினைத்த இராமர் நவக்கிரகங்களின் மூலம் கிடைக்கக் கூடிய சக்தியை பெறவும், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கவும் நவக்கிரக வழிபாட்டை செய்ய நினைத்தார். அதற்காக ஒன்பது நவக்கிரகங்களையும் குறிக்கும் வகையில் ஒன்பது கல்தூண்களை கடலுக்குள் பிரதிஷ்டை செய்தார். அந்த இடம்நவபாஷாணம்” (நவம்ஒன்பது; பாஷாணம்கல்) என்றழைக்கப்படுகிறது. தேவிபட்டிணம் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது.

இராமர் கல்தூண்களை கடலுக்குள் ஸ்தாபித்த போது அவை கடலின் சீற்றத்தாலும், கொந்தளிப்பாலும் அழிந்து விடக்கூடாது என எண்ணினார். கடலரசனுக்கு சீற்றமில்லாது இருக்குமாறு உத்தரவுகள் பறந்தன. இராம கட்டளையே சாசனமாய் ஏற்றவன் அப்பகுதியில் அலைகளை எழுப்பாமல் அமைதியானான். ஆழமற்ற நவபாஷாணத்திற்குள் இருள் சூழும் நேரத்திற்கு முன்பாக சென்று வழிபட்டு வரலாம்இருள் சூழும் மாலை நேரத்தில் மற்ற நேரங்களை விட கடலின் நீர் மட்டம் உயர்ந்து விடும் என்பதால் காலையில் சென்று வழிபடுதல் நல்லது.

இங்குள்ள நவக்கிரகத்திற்கென கட்டிடங்கள் ஏதுமில்லை. பூஜைகளைக் கூட அவரவரே செய்து கொள்ளலாம். தொட்டு வழிபடலாம். கரையிலிருந்து நவபாஷாணத்திற்கு சென்று வர பாலமும், நவக்கிரகத்தை வலம் வர ஏதுவாக அதைச் சுற்றிலும் இரும்பு கிராதி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடி நவக்கிரகத்தை வணங்கி வழிபட்ட பின் செல்ல வேண்டிய தலம்பாம்பன்

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்



                                                                                                                                                     
 

No comments:

Post a Comment